திங்கள், 9 ஜூன், 2014

வியட்னாம் தூதுவர் - வடமாகாண முதலமைச்சருடன் சந்திப்பு!!


இன்று காலை 11.30 மணியளவில் சோஷலிய குடியரசாகிய வியட்நாமின் தூதுவர் டோன் சின் தான்ங் அவர்கள் முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் வாசஸ்தலத்தில் தமது அலுவலர் புங் ட்ரொங் துவான் என்பவருடன் வந்து அவரைச் சந்தித்தார்.
தம் நாட்டினால் வழிநடத்தப்படும் நீர்வாழ் உயிர் சம்பந்தமான வியட்நாம் தொழில்நுட்ப உதவித் திட்டம் என்ன விதத்தில் கிளிநொச்சி,  வவுனியா போன்ற இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன என்பதைப் பார்வையிடத் தாங்கள் வந்ததாகக் கூறினார்கள்.

நாட்டின் பல பாகங்களிலும் பரிசீலனை செய்ததில் வடமாகாணமே நீர் வாழ்
உயிரினங்களை வளர்த்தெடுக்குந் தொழிலுக்கு மிகவும் பொருத்தமான இடம் என்பது கண்டு இங்கு எம் மாகாணத்தில் தொழில் நுட்பப் பயிற்சிகளையும் பாடங்களையும் கொடுத்து வருவதாகக் கூறினார்.

பட்டம் பெற்ற இரு வாலிபர்களைத் தம் நாட்டுக்கழைத்து அங்கு தமது தொழிற்சாலைகளைப் பார்வையிடவும் பயிற்சி பெறவும் உதவியதாகக் கூறினார். அவர்கள் இங்கு வந்து தொடங்கியுள்ள வழிகாட்டல் ஆரம்பத் திட்டமானது ஏற்கனவே வெற்றி கண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

உள்நாட்டு நீர் நிலைகள் எங்கள் வடமாகாண சபையின் அதிகாரத்தினுள் வருவதால் மேலும் மேலும் இப்பேர்ப்பட்ட நீர் வாழ் உயிரின இனப் பெருக்கத்திற்கான விஞ்ஞான ரீதியான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்தால் காலா காலத்தில் உள்ள நீர் நிலைகளில் பெருகி வரும் உயிரினங்களை, மீன்களை, கடலட்டைகளை, காணிப் பாசிகளை எல்லாம் நல்ல விலைக்கு சீனா, யப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என்றுரைத்தார்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னர் போரினால் பாதிக்கப்பட்டு எதுவுமே இல்லாத ஒரு நிலையில் இருந்த வியட்நாம் இன்று பல இலட்ச டாலர்களுக்கு மீன் ஏற்றுமதி செய்வதாகவும் தமது நாடு பொருளாதார ரீதியாக மேம்பட்டு வருவதாகவும் அறிவித்தார்.

மேற்படி தொழில் நுட்பப் பயிற்சி முறைகளின் வெற்றிக்கு வித்திடும் விதத்தில் தாம் தொடர்ந்து எமக்குப் போதிய உதவிகளை வழங்கப் போவதாகவும் அறிவித்தார்.

இதன் பின் ஆளுநரைச் சந்தித்து அதன் பின் வேலைத்திட்டம் நடைபெறும் பிரதேசங்களைப் பார்வையிடப் போவதாக அறிவித்து அவர்கள் விடை பெற்றுச் சென்றார்கள்.

நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக