செவ்வாய், 19 அக்டோபர், 2010

யாழ் ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள குடும்பங்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசவிருப்பதாக அமைச்சர் மில்றோய் தெரிவிப்பு..!

யாழ் ரயில் நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள குடும்பங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து பேசவிருப்பதாக மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோ நேற்று தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடன் சந்தித்து பேசிய பின்னர் இக்குடும்பத்தினர் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இக்குடும்பங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது பூர்வீக பிரதேசமான யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியமர்த்துமாறு கோரி சுமார் 150குடும்பங்களைச் சேர்ந்த சிங்களமக்கள் யாழ். ரயில்வே நிலையத்தில் தங்கியுள்ளனர். இவர்களை சந்தித்து உரையாடுவதற்காக அமைச்சர் மில்ரோய் நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்தார். இதன்போது அம்மக்கள் அமைச்சரிடம் தமது பெற்றோர் இங்கே காலங்காலமாக வியாபாரம் செய்து வந்ததாகவும் 1970களில் பிரதமராகவிருந்த சிறிமாவோ பண்டார நாயக்கவினால் இவர்களுள் சிலருக்கு சொந்தமாக காணிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். தமது பழைய காணிகளை மீளப்பெற்றுக் கொடுக்கும்படியும் இல்லையேல் அதற்கு பதிலாக புதிதாக காணிகளைப் பெற்றுத்தருமாறும் அவர்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது விடயமாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாக இவர்களுக்கு அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக