சனி, 18 செப்டம்பர், 2010

பிரபாகரன் சரணடைய விரும்பி இருக்கவில்லை- பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்..!!

புலிகள் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் சரணடைய விரும்பி இருக்கவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இந்தியாவின் த ஏசியன் ஏஜ் பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் அவர் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு, புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் சரணடைய விரும்பியிருக்கவில்லை. அதனால்தான் தோற்கடிக்கப்படுகின்றமைக்கு முதல்நாள் கூட புலிகள் பதில் தாக்குதல் ஒன்றை நடத்தித் தப்பிச் செல்கின்றமைக்கு முயற்சித்தனர். அவர்கள் சரணடைந்திருந்தால் பிரச்சினை தீர்ந்திருக்கும். படையினர் ஏராளமான இழப்புகளுக்கு மத்தியில் உக்கிரமாகப் போரிட்டு வெற்றியைத் தொட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த இறுதி நிமிடத்தில்தான் புலிகள் யுத்த நிறுத்தத்துக்குத் தயார் என்று தூது அனுப்பினார்கள். ஆகவேதான் அக்கோரிக்கையை நாம் நிராகரிக்க வேண்டி ஏற்பட்டது. புலிகள் சரணடைய வருகின்றார்கள் என்று எமக்கு எவரும் அறிவித்திருக்கவில்லை. நாம் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதில் பற்றுறுதியாகச் செயற்பட்டமையாலேயே புலிகளைத் தோற்கடிக்க எமக்கு காலம் எடுத்தது. பொதுமக்கள் நலனை முன்னிறுத்தி செயற்பட்டிருக்காவிட்டால் 24 மணித்தியாலங்களுக்குள்ளேயே புலிகளின் இடத்தைப் பிடித்திருப்போம். ஆனால் எமக்கு அந்த இடத்தைப் பிடிக்க இருமாத காலம் எடுத்துள்ளது. ஆகவே நாம் எதிர்கொண்டிருந்த சவால்களை சர்வதேச சமூகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பயங்கரவாதத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் நாடுகள் இலங்கையை கட்டாயம் முன்னுதாரணமாகக் கொண்டு செயற்படுதல் வேண்டும். அரசபடையினர் மனிதாபிமானத்தை ஒரு கரத்திலும், ஆயுதத்தை இன்னொரு கரத்திலும் ஏந்திக் கொண்டுதான் சண்டையிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக