செவ்வாய், 22 ஜூன், 2010

புனர்வாழ்வு பயிற்சிகளை முடித்துக்கொண்ட பெண்புலிகள் 400பேருக்கு வேலைவாய்ப்பு..!

புனர்வாழ்வு பயிற்சிகளை முடித்துக்கொண்ட முன்னாள் பெண்புலி போராளிகள் 400பேருக்கு நேற்றுமுதல் ஆடை தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள இரண்டு புனர்வாழ்வு முகாம்களில் இவர்கள் பயிற்சிகளை முடித்துள்ளனர். இவர்கள் நேற்று பஸ்களில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். தொழிற்சாலைகளில் இவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டாலும், பாதுகாப்பு படையினரின் தடுப்புக் காவலிலிருந்து இவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு மாதாந்தம் 12ஆயிரம் ரூபா ஊதியம் வழங்கவும் குறித்த தொழிற்சாலை நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். 400 பெண் போராளிகளும் பாதுகாப்பு படையினரின் பொறுப்பில் தங்கவைக்கப்படவுள்ளனர். அதேவேளை, வவுனியாவிலுள்ள புனர்வாழ்வு முகாம்களில் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு கணினி, அழகுக்கலை, மின்சார தொழிற்நுட்பம், கட்டிட நிர்மாணம் உள்ளிட்ட கைத்தொழில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக