வியாழன், 20 மே, 2010

தாய்லாந்தில் திருப்பம் - ராணுவ அடக்குமுறை தொடர்கிறது

தாய்லாந்தில் அரசை எதிர்த்து, போராட்டம் நடத்தி வந்த நான்கு போராட்டத்தலைவர்கள் சரணடைந்துள்ளனர். இருப்பினும் போராட்டக்காரர்களின் வன்முறை குறையாததால் பாங்காக்கில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. தாய்லாந்து பிரதமராக இருந்த ஷினவத்ரே 2006ம் ஆண்டு ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு, அங்கு ராணுவ ஆட்சி நடந்தது. 2008ல் நடந்த தேர்தலில் அபிசித் வெஜ்ஜஜிவா ராணுவ உதவியுடன் பிரதமரானார். தில்லு முல்லு செய்து அபிசித் பிரதமராகி விட்டதாக கூறி, ஷினவத்ரேவின் ஆதரவாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக, தலைநகர் பாங்காக்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ராணுவ அதிகாரியும், போராட்டக்காரர்களின் ஆலோசகருமான சீ டயங், ராணுவத்தினர் சுட்டதில் தலையில் குண்டு காயம் பட்டு காலமானார்.இதனால், போராட்டக்காரர்களின் ஆர்ப்பாட்டம் தீவிரமானது. வன்முறையை கைவிட்டால் பேச்சு நடத்த தயார், என அரசு அறிவித்தது. ஆனால், போராட்டக்காரர்கள் மசியவில்லை. இதையடுத்து ராணுவம் பாங்காக் நகர வீதிகளில் ரோந்து பணியை மேற்கொண்டு ஆர்ப்பாட்டத்திலும் வன்முறையில் ஈடுபடும் போராட்டக்காரர்களை சுட்டு தள்ளியது. இந்த முறையில் 42 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்நிலையில் போராட்டம் நடக்கும் இடத்தை ராணுவம் சுற்றி வளைத்தது. இதையடுத்து, நான்கு போராட்டத்தலைவர்கள் சரணடைந்தனர்.இதனால், கொதிப்படைந்த போராட்டக்காரர்கள் சிலர் நாட்டு கையெறி குண்டுகளை ராணுவத்தினர் மீது வீசினர். இதில் இரண்டு ராணுவ வீரர்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர். இத்தாலி நாட்டு பத்திரிகை நிருபர் இந்த குண்டு வெடிப்பில் பலியானார். பங்கு சந்தை கட்டடம், மின்வாரிய கட்டடம், வணிக வளாகங்கள் போன்றவற்றை போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். ஒரு தலைபட்சமாக செய்தி வெளியிடுவதாக கூறி அரசு ‘டிவி’ நிலைய அலுவலகத்தை, போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். அங்குள்ள கார்களை தீ வைத்து கொளுத்தினர்.நிலைமை கட்டுக்குள் வராத காரணத்தால், இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை பாங்காக்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷினவத்ரே பேட்டி ஒன்றில் குறிப்பிடுகையில், ‘ ராணுவ அடக்கு முறை மக்களிடையே கொந்தளிப்பை தான் ஏற்படுத்தும். ஒரு காலகட்டத்தில், இந்த மக்கள் பயங்கரவாதிகளாக மாற வாய்ப்பு ஏற்பட்டு விடும்’ என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக