செவ்வாய், 6 ஏப்ரல், 2010

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான அரசு ஆதரவு பெற்ற ஆயுதக்குழு யாழ்ப்பாண வீதிகளில் வலம் வருகிறது.. -வரதராஜப்பெருமாள்..!

இலங்கையில் போர் முடிந்து பல மாதங்களாகிவிட்ட நிலையிலும், யாழ்ப்பாணத்தில் பொதுமக்களிடையே அச்சம் நீடிப்பதாக அப்பகுதியின் முன்னாள் முதல்வர் ஏ.வரதராஜபெருமாள் இந்திய பத்திரிக்கைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார். 1990-ல் இலங்கையைவிட்டு வெளியேறிய அவர், சுமார் 20ஆண்டுகளுக்குப் பின் தற்போது யாழ் திரும்பியுள்ளார். இந்நிலையில் அவர் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் கடந்தகாலத்தில் கையில் துப்பாக்கியுடன் வீதிகளில் திரிந்த புலிகளோ, வேறு எந்த அமைப்பைச் சேர்ந்தவர்களோ, ராணுவ வீரர்களோ ஆதிக்கம் செலுத்தினர். தற்போது புலிகள் இல்லாதநிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான அரசு ஆதரவு பெற்ற ஆயுதக்குழு யாழ்ப்பாண வீதிகளில் வலம் வருகிறது. அவர்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த ஆயுதக்குழுவை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும்கட்சி ஓரிரு இடங்களில் வெற்றி பெறுவது கூட, இந்த ஆயுதக் குழுவின் அத்துமீறல் நடவடிக்கைகள் காரணமாக கேள்விக்குறியாகி விட்டது. இதனால், தமிழ் தேசிய கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. இந்த அச்சம் காரணமாகவே, தான் விரும்பும் கட்சி எது என்பதை சாதாரண மக்கள் வெளிப்படையாக கூறுவதில்லை. அதனால்தான் தேர்தல் பிரசார கூட்டங்களில் மக்கள் கலந்து கொள்வதில்லை. மக்கள் தங்கள் கருத்தை வெளிப்படையாக கூறும் அளவுக்கு நிலையை மேம்படுத்த நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் 30ஆண்டுகள் புலிகள் ஆதிக்கம் செலுத்திய போதும், தற்போது புலிகள் அமைப்பின் சாதக, பாதக அம்சங்கள் குறித்தோ, பிரபாகரன் குறித்தோ யாரும் பேசுவதில்லை. புலிகளை கடந்த காலமாக கருதும் மக்கள், வருங்காலம் குறித்தே தற்போது சிந்தித்து வருகின்றனர். பொருளாதார முன்னேற்றம் அடையும் அதே நேரத்தில் அரசியல் உரிமையும் தேவை என யாழ்ப்பாணம் மக்கள் கருதுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக