வெள்ளி, 26 மார்ச், 2010

சி.பி.ஐ.யின் தேடப்படுவோர் பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கம்..!

சென்னை,​​ மார்ச் 24: மத்திய புலனாய்வுப் பிரிவின் ​(சி.பி.ஐ.)​ இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.அந்த அமைப்பின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மானின் பெயர் மட்டும் இணையதளத்தில் நீக்கப்படாமல் உள்ளது.பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை இலங்கை அரசு இந்திய அரசிடம் அண்மையில் அளித்தது குறிப்பிடத்தக்கது.இலங்கை ராணுவத்துக்கும்,​​ விடுதலைப் புலிகளுக்கும் கடந்த 25 ஆண்டுகளாக நீடித்து வந்த கடும் சண்டை கடந்த 2009 மே மாதத்துடன் முடிவுக்கு வந்தது.​ 2009 மே 18}ம் தேதி விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன்,​​ இலங்கையிலுள்ள நந்திக்கடல் பகுதியில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.இலங்கை ராணுவத்திடம் சரணடைந்த பிரபாகரனின் முன்னாள் மெய்க்காப்பாளர் தயா மாஸ்டர்,​​ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணா ஆகியோர் பிரபாகரன் உடலை அடையாளம் காட்டினர்.ஆனால்,​​ பிரபாகரன் இறந்தது தொடர்பாக தொடர்ந்து மர்மம் நீடித்து வந்தது.​ அதேநேரத்தில்,​​ பொட்டு அம்மான் இறப்பிலும் சந்தேகம் நீடித்து வருகிறது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய எதிரியாகக் கருதப்பட்ட பிரபாகரன் மீது இந்தியாவில் வழக்கு உள்ளது.​ இந்த வழக்கு சென்னையிலுள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இந்த நிலையில்,​​ பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை பெறுவதற்கு இந்திய அதிகாரிகள்,​​ இலங்கை அரசுடன் தொடர்பு கொண்டு வந்தனர்.கடந்த பிப்ரவரி 1}ம் தேதி பிரபாகரனின் இறப்புச் சான்றிதழை,​​ இலங்கை அரசிடமிருந்து சி.பி.ஐ.​ பெற்றுக் கொண்டதாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார்.​ அதைத் தொடர்ந்து,​​ தற்போது சிபிஐ}யின் இணையதளத்தில் தேடப்படுவோரின் பட்டியலில் இடம்பெற்றிருந்த பிரபாகரனின் பெயர் மற்றும் படம் ஆகியவை நீக்கப்பட்டுள்ளது.ராஜீவ் கொலை:​​ சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில்,​​ கடந்த 1991 மே 21}ம் தேதி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி,​​ மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.​ இந்த வழக்கை மத்தியப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புப் பிரிவு விசாரித்து வந்தது.வழக்கில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்,​​ உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் முக்கிய எதிரிகளாகச் சேர்க்கப்பட்டனர்.​ இந்த வழக்கில் பிரபாகரன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.இதைத்தொடர்ந்து சிபிஐ}யின் இணையதளத்தில் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக