வியாழன், 11 பிப்ரவரி, 2010

கொழும்பில் எதிர்க்கட்சி ஊர்வலத்தில் கலவரம்..!

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது தொடர்பில், தலைநகர் கொழும்பின் உயர்நீதிமன்ற வளாகத்துக்கு அருகே ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே கலவரம் மூண்டதை அடுத்து கூட்டத்தைக் கலைக்க பொலிசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.
பொன்சேகாவின் விடுதலை கோரி அவரது மனைவி எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பெரும் ஊர்வலமாகச் சென்று உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்வதற்காக சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவுடன் எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் உயர்நீதிமன்றத்துக்கு ஊர்வலமாக வந்தபோது, ஆளும் கட்சி ஆதரவாளர்களுக்கும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் இடையில் கலரவரம் மூண்டது.
இத்தருணத்தில் பொலிசாரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பயன்படுத்தியிருந்தனர்.
நடந்த கலவரத்தில் குறைந்தபட்சம் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். வளாகத்துக்கு வெளியே பொலிசார் அமைத்திருந்த தடைகளை உடைத்து நீதிமன்றத்துக்குள் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் நுழைந்திருந்தனர்.
கலகத்துக்குப் பின்னர் அனோமா பொன்சேகா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் நாட்டின் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவத்தின் புதிய தளபதி ஜெகத் ஜெயசூரிய, திங்கள் இரவு சரத் பொன்சேகாவைக் கைது செய்யச் சென்றிருந்த மூத்த இராணுவ அதிகாரி சுமித் மானவடு உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த மனு வரும் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
எதிர்க்கட்சியினரின் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் மக்கள் ஜனநாயக முன்னணி ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூர்ய மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
கைதாகியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா தடுப்புக் காவலில் கொல்லப்படுவார் என்று தாங்கள் அஞ்சுவதாக எதிர்கட்சிகள் இன்று கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.
சரத் பொன்சேகா மீதான இராணுவ குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக ஆதராங்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் சார்பாகப் பேசவல்லவர் ஒருவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இராணுவ உறுப்பினராக இருந்தபொழுதே அரசியல் வாதிகளுடன் இணைந்து சதி நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை சரத் பொன்சேகா மறுக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக