சனி, 9 ஜனவரி, 2010

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 713பேர் இன்று செட்டிக்குளத்தில் வைத்து விடுவிப்பு..!!

புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 713பேர் இன்று வவுனியா செட்டிக்குளத்தில் நடைபெறும் வைபவமொன்றில் வைத்து விடுவிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகம் தெரிவித்துள்ளது. பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு இல்லாதவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர்ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்துள்ளார். வவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இவர்களிடையே 18 வயதுக்குக் குறைவானவர்கள் சுமார் 100 பேரும் அடங்குவர். ஏனையவர்கள் தொடர்பான தகவல்களும் திரட்டப்பட்டு வருவதோடு பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்பற்றவர்கள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஏனையவர்கள் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுவிக்கப்படவுள்ளனர். படையினரிடம் சரணடைந்துள்ள சுமார் 11,544புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 18தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பயங்கரவாதச் செய ற்பாடுகளுடன் நேரடியாகத் தொடர்பு அற்றவர்கள் ஒரு மாதத்திற்கும் குறைவானகாலம் இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டவர்கள், பங்கர்வெட்டுதல் போன்ற பணிகளில் பலாத்காரமாக ஈடுபடுத்தப்பட்டவர்கள் போன்றோர் விடுவிக்கப்படுபவர்களிடையே அடங்குவதாக புனர்வாழ்வு ஆணையாளர் பணியகம் தெரிவித்தது. புனர்வாழ்வு அளிக்கப்படும் புலிகள் இயக்க முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு பயங்கரவாதச் செயற்பாடுகளில் எத்தகைய தொடர்பு இருந்தது என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகின்றது. இவர்களில் நேரடித் தொடர்பற்றவர்கள் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட உள்ளதாகவும் தயா ரத்னாயக்க தெரிவித்துள்ளார். புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களிடையே பட்டதாரிகள் 22பேரும் பட்டதாரி மாணவர்கள் 148பேரும் அடங்குவர். இவர்களில் பட்டதாரி மாணவர்களுக்கு யாழ்.பல்கலைக் கழகத்தில் அனுமதிவழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு ஆசிரியர்கள், மருத்துவர்கள் போன்றோருக்கு தமது முன்னைய தொழிலைத் தொடர்ந்து செய்யவும் அனுமதி வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக