திங்கள், 21 செப்டம்பர், 2009

யாழ். மாணவர்களுக்குரிய பாடப்புத்தகங்களை யாழ்-கண்டி வீதி ஊடாக அனுப்பி வைக்க நடவடிக்கை!

2010 ஆம் ஆண்டுக்கான பாடப் புத்தகங்களை குடாநாட்டு மாணவர்களுக்கு வழங்கவென லொறிகளில் ஏ9 வீதி வழியாக அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.எதிர்வரும் புதன்கிழமை 23 ஆம் திகதி இந்தப் புத்தகங்கள் லொறிகளில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்துள்ளார்.
பத்து லட்சம் புத்தகங்களை இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதற்கு 108 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டிருக்கின்றது.
யுத்த மோதல்கள் ஓய்ந்து வடபகுதிக்கான தரைவழிப்பாதை திறக்கப்பட்டு போக்குவரத்துக்களும் ஆரம்பமாகி நடைபெறுவதையொட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக யாழ். குடாநாட்டுக்கான பாடப்புத்தகங்கள் கடல் வழியாக கடற்படையினரின் உதவியோடு இதையும்விட பெருந்தொகைப் பணச் செலவிலேயே அனுப்பி வைக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
லொறிகள் மூலம் கொண்டு செல்லப்படும் இந்த பாடப்புத்தகங்கள் யாழ். குடாநாட்டில் உள்ள கல்வி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு உரிய பாடசாலைகளுக்கு விநியோகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக