
இந்த சம்பவம் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குற்றச் செயல்களைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பொதுமக்களது தாக்குதலைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உடுத்துறை, ஒன்பதாம் வட்டாரத்தைச் சேர்ந்த வேலன் சிவபாதசுந்தரம் (வயது-56 ) என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
காயமடைந்தவர் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்றைய தினம் உடுத்துறை 9ம் வட்டாரம் பகுதியில் இரு குடும்பங்களுக்கிடையில் சண்டை நடைபெற்ற நிலையில் ஒரு குடும்பம் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து சண்டையில் ஈடுபட்ட மற்றைய வீட்டாரை தேடி பொலிஸார் இன்றைய தினம் மேற்படி உடுத்துறை 9ம் வட்டாரத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், சண்டையில் ஈடுபட்ட நபர் வீட்டில் இருக்கவில்லை.
இதனால் அவரின் சகோதரனை கைது செய்ய பொலிஸார் முயற்சித்ததுடன், கர்ப்பவதியாக இருக்கும் சகோதரி மீதும் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து பொதுமக்கள் குழப்பமடைந்து பொலிஸாரின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் வானத்தை நோக்கியும், மக்களை நோக்கியும் சுட்டதில் வேலன் சிவபாதசுந்தரம் (வயது 56) என்பவர் படுகாயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை தாக்குதல் நடத்திய பொலிஸார் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தின் போது 15 பொலிஸார் அங்கு நின்றதாகவும், அவர்கள் 34 முறை சுட்டதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக