புதன், 2 ஜூலை, 2014

வவுனியாவில் பாதிக்கபட்ட 07 தொழிலாளர்களும் நிரந்தர நியமனம் கோரி தொடர்ந்து கவன யீர்ப்பு போராட்டம் !!


நேற்று (01.07) வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) வன்னி மாவட்ட இணைப்பாளர் திரு கந்தையா சிவநேசன்(பவன்) ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்

இப் ஊழியர்களின் பிரச்சனையை குழுவொன்று அமைத்து அதன் மூலம் ஒரு வாரத்திற்குள் தீர்பதாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம்  உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரசபையின் அட்டவணைப்படுத்தப்படாத ஊழியர்கள் திங்கள் கிழமையில் இருந்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பந்த காலம் முடிவடைந்ததாக தெரிவித்து கடந்த பல வருடங்களாக சேவையாற்றிய சுகாதார ஊழியர்கள் 7 பேரினதும்
நியமனத்தை மீள வழங்கல், ஊழியர்களுக்கான பதவி உயர்வு, அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என 12 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபை சுகாதார ஊழியர்கள், சாரதிகள், காவலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் வவுனியா நகரின் கழிவகற்றல் செயற்பாடு ஸ்தம்பிதம் அரடந்துள்ளதுடன், நகர் எங்கும் துர்நாற்றம் வீசுகின்றது. இந் நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை வடமாகாண முதலமைச்சரின் பிரதிநிதியாக வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் சென்று சந்திப்பை ஏற்படுத்தி கலந்துரையாடியிருந்தார்.

இதன் போது சுகாதார அமைச்சர் தெரிவித்ததாவது,

இந்த போராட்டம் தொடர்பில் நான் வடமாகாண முதலமைச்சரிடம் தெரியப்படுத்தியுள்ளேன். அவரே தன் சார்பாக என்னைச் சென்று கதைக்குமாறு கூறியிருந்தார். ஏனெனில் இது அவரின் கீழ் வருகின்ற அமைச்சரின் வேலையாகும். எனக்கும் உங்களின் போராட்டத்தால் பாதிப்பு உண்டு.

இங்கு போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களில் நியமனம் வழங்கப்படாத 7 ஊழியர்களுக்கும் வேறு திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் தரமுடியும். அதன் பின் வெற்றிடம் ஏற்படும் பட்சத்தில் நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குவதாக தொவித்ததுடன் சுகாதாரம் தொடர்பான முக்கிய வேலைகளை நீங்கள் செய்வதால் இப் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புமாறும் தெரிவித்தார்.

எனினும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வவுனியா நகரசபையில் தமக்கு வேலைகளைத் தரக் கூடிய வகையில் வெற்றிடம் உள்ளதாக ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி தமது வேலைகளை உரிய முறையில் வழங்காது நகரசபை நிர்வாகம் இழுத்தடிப்பதாகவும், நிர்வாக ரீதியில் சில உத்தியோகத்தர்களினதும் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களால் பல பிரச்சனைகள் தமக்குள் இருப்பதாகவும் கூறியதுடன் தமது 7 பேருக்கும் நியமனம் நகரசபைக்குள் வழங்க முடியும் எனவும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து நகரசபை பிரச்சனை தொடர்டபில் விசாரணை செய்ய மூன்று பேர் கொண்ட குழுவொன்றினை நியமிப்பதாகவும் அதன் மூலம் நகரசபை நிர்வாகத்தினர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரித்து பிரச்சனைகளுக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு காண்பதாகவும் வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் தாம் கடந்த மே மாதத்தில் இருந்து இவ் ஊழியர்களின் பிரச்சனை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் உட்பட அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவருக்கும் தெரியப்படுத்தியிருந்ததாகவும் அவர்கள் இதுவரை கவனம் செலுத்தாத நிலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகின்றனர்.


















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக