புதன், 6 அக்டோபர், 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்கால சத்தியப் பிரமாண நிகழ்வு அநுராதபுர நகரில் நடைபெறும்..!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்திற்கான சத்தியப் பிரமாண நிகழ்வு அநுராதபுர நகரில் நடைபெறுமென்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்று ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதத்தின் மூன்றாவது வாரமளவில் மிகவும் கோலாகலமான முறையில் நடைபெறவுள்ள சத்தியப் பிரமாண நிகழ்வுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மக்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக்காலத்தில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மிகவும் மோசமான ஒரு சூழலில் 2005ம் ஆண்டு நாட்டை பொறுப்பேற்ற ஜனாதிபதி யுத்த நெருப்புக்களை தற்பொழுது வெற்றிகரமான முறையில் அணைத்துள்ளார். இதனையடுத்து அமோக வாக்குகளை அடுத்து ஜனாதிபதிக்கு மீண்டும் ஆணையை வழங்கிய மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளனர். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும். இதனை அடிப்படையாகக் கொண்டே ஜனாதிபதி பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது பதவிக் காலம் முடிவுறும் இறுதிநாள் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலாவது கப்பல் வெள்ளோட்டம் விடப்படும் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதன்போது தெரிவித்துள்ளார். அதேசமயம், ஜனாதிபதியை கௌரப் படுத்தும் வகையில் பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களும் அன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக