திங்கள், 30 ஆகஸ்ட், 2010

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமாராவ் இன்று இலங்கை வருகை..!

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமாராவ் இன்று இலங்கை வருகிறார். இரு தரப்புச் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைவரும் இவர், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திச் செயற்திட்டங்களை நேரில்சென்று பார்வையிடுவாரென வும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமாராவ் உள்ளிட்ட குழுவினர் வடக்கில் வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர். நாளை வவுனியா சென்றடையும் நிரூபமா தலைமையிலான குழுவினர் அங்கே நிறுவப்பட்டிருக்கும் மெனிக்பாம் மற்றும் கதிர்காமர் நிவாரணக் கிராமங்களை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர், வவுனியா அரச அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்றில் பங்குபற்றவுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் நிலக்கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் இந்தியக் குழுவினர் செயலாற்றும் இடங்களை நேரில் சென்று பார்வையிடுவாரெனவும் வவுனியா அரசாங்க அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நிரூபமாராவ் வடக்கில் ஏனைய மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின்கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்து ஆராய்வார். குறிப்பாக வடக்கில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்படவிருக்கும் வீடுகள் குறித்து இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படுமெனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக