
வடக்கு, கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் 25 கோடிரூபாவை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். மகளிர் விவகார சிறுவர் அபிவிருத்தி பிரதியமைச்சராகப் பதவியேற்ற பின் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா இந்தியத் தூதுவர் அசோக்காந்தை உத்தியோகபூர்வமாக சந்தித்துப் பேச்சுநடத்தியுள்ளார். இப்பேச்சுவார்த்தையின்போதே மேற்படி இணக்கம் காணப்பட்டுள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். தாம் தமக்கான அமைச்சுப் பொறுப்பை கையேற்றபின் முதல் நடவடிக்கையாக வடகிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களின் வாழ்க்கை மேம்பாடு சம்பந்தமாக இந்தியத் தூதுவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறிய பிரதியமைச்சர் இப்பேச்சுவார்த்தையின் பயனாக உடனடியாக 25கோடி ரூபா நிதியை வழங்க இந்தியா உறுதியளித்துள்ளதெனவும் குறிப்பிட்டுள்ளார். கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள் 49,000 பேர் உள்ளனர். இவர்களில் ஆயிரம் பேருக்கு சுயதொழில்களை மேற்கொள்வதற்கு மேற்படி 25கோடி ரூபாநிதியும் செலவிடப்படவுள்ளது. இதேபோன்று ஏனைய நாடுகள் சர்வதேச அமைப்புகளுடனும் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வடக்கு, கிழக்கில் வாழும் பெண்கள், சிறுவர்கள் அதிலும் குறிப்பாக யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதே தமது நோக்கமாகுமெனவும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக