செவ்வாய், 4 மே, 2010

உலகளாவிய ரீதியில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் கண்டனம்..!!

உலகளாவிய ரீதியில் ஊடகவியலாளர்கள்மீதான தாக்குதல்களை ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூன் கண்டித்துள்ளார். சர்வதேச பத்திரிகை சுதந்திரதினமான நேற்று திங்கட்கிழமை அதனை நினைவுகூர்ந்து விடுத்த அறிக்கையிலேயே பான் கீ மூன் இக்கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறான கொலைகளைக் கண்டிக்கிறேன். குற்றமிழைத்தவர்கள் நீதியின்முன் நிறுத்தப்பட வேண்டும். ஊடகத்துறையில் பணியாற்றும் சகலரையும் பாதுகாக்க வேண்டிய கடமையை சகல அரசுகளுமே கொண்டுள்ளன. ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் இழைத்தவர்களை விசாரணை செய்து நடவடிக்கையெடுத்தல் இந்தப் பாதுகாப்பு விடயத்துக்குள் அவசியமாக உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பான் கீ மூன் கூறியுள்ளார். கடந்த வருடம் உலகளாவிய ரீதியில் 77 ஊடகவியலாளர்கள் கடமையிலிருந்தபோது கொல்லப்பட்டுள்ளனர். 2009 நவம்பர் 23ல் கொல்லப்பட்ட 32 பிலிப்பைன்ஸ் ஊடகவியலாளர்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவர்கள் யாவரும் யுத்தச் செய்திகளைச் சேகரிக்கும் உயர்மட்டத்திலான நிருபர்களல்ல. அவர்கள் உக்கிரமான சண்டையின் மத்தியில் கொல்லப்பட்டிருக்கவில்லை. அநேகமானவர்கள் சமாதான நேரத்தில் சிறிய உள்ளூர் பிரசுரங்களில் பணியாற்றியவர்கள். ஊழலை வெளிப்படுத்த முயற்சித்ததற்காக இவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும் பான் கீ மூன் கூறியுள்ளார். தகவலுக்கான கட்டுப்பாடுகள் உள்ள சூழ்நிலையிலேயே தமது தொழிலை பல ஊடகவியலாளர்கள் மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்கு அழுத்தங்கள், இம்சைகள், மிரட்டல்கள் அல்லது உடல் ரீதியான தாக்குதல்கள் கூட அன்றாட வேலைகளின்போது இடம்பெறுகிறது என்று ஐ.நா. வின் யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் இரினா பொக்கோவா தெரிவித்துள்ளார். இதேவேளை, கடுமையான செய்தித் தணிக்கையை சில அரசாங்கங்கள் ஊடகங்களுக்கு விதித்திருப்பது குறித்தும் பான் கீ மூன் சாடியுள்ளார். போக்கை மாற்றிக் கொள்வதற்கான செயற்பாடுகளில் நாம் ஈடுபட வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.தகவலைப் பெற்றுக்கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது. இத்தகவலை வழங்குவது அரசின் கடமை. இல்லையேல் அது மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கச் செய்யும். இந்த மாதிரியான வெளிப்படைத்தன்மையானது சிறந்ததொரு அரசாங்கத்திற்கு அவசியமானது என்றும் பான் கீ மூன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக