புதன், 27 மே, 2015

மீண்டும் தலைதூக்கும் இந்திய - சீன எல்லைப் பிரச்சனை.!!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசம் சீனாவுக்கு சொந்தம் என அந்நாட்டு வெளியுறவு துறை மீண்டும் அறிவித்துள்ளது. இந்திய சீன எல்லையை வரையறுக்கும் மக்மோகன் எல்லைக்கோடு சட்டவிரோதமானது எனவும் தெரிவித்துள்ளது.
இந்திய சீனா இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்னை உள்ளது. இந்த இரண்டு நாடுகளின் எல்லையை வரையறுக்கும் மக்மோகன் எல்லைக்கோட்டை இந்தியா அங்கீகரித்துள்ளது. ஆனால் இந்தக் கோட்டை சீனா அங்கீகரிக்க மறுத்து வருகிறது. திபெத்தை ஒட்டி அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்தில் பல பகுதிகள் எங்களுக்கு சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி ஒருவருக்கு சீனா விசா தர மறுத்து விட்டது. எங்கள் நாட்டை சேர்ந்தவருக்கு நாங்கள் ஏன் விசா கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பியது. இதே போல் இந்த மாநிலத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சீனாவில் நடைபெற்ற ஆசிய போட்டியில் பங்கேற்க சென்ற போது விசா தர மறுத்து பிரச்னையை ஏற்படுத்தியது.

அருணாச்சல பிரதேசத்துக்குள் அடிக்கடி சீன வீரர்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. எல்லை பிர்சனை குறித்து பேசி தீர்த்துக் கொள்ள இந்தியா தயாராக இருப்பதாக அண்மையில் சீனா சென்ற பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் சீன தரப்பில் இதற்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் சீன எல்லை பிரச்னை குறித்து கடந்த 22ம் தேதி டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் பேசினார். அப்போது அருணாச்சல பிரசேத்தின் தவாங் பகுதிக்கு சீனா உரிமை கோருவது கவலை அளிப்பதாக இருக்கிறது எனவும், இரு நாடுகளின் நட்புறவுக்கு எல்லை பிரச்னை முட்டுக்கட்டையாக இருக்கிறது எனவும் பேசினார். இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு சீன வெளியுறவு அமைச்சகத்துக்கு பிடிஐ சார்பில் கேள்வி அனுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹுவா சுன்யிங் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு மாகாணமான திபெத்துக்கு சொந்தமானது. இந்திய சீன எல்லையை வரையறுக்கும் மக்மோகன் கோடு சட்டவிரோதமானது. அதனை சீனா ஏற்றுக் கொள்ளாது. இந்திய சீன எல்லையில் கிழக்கு பிராந்தியத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. இதில் எந்த குழப்பமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக