செவ்வாய், 20 ஜூலை, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலியான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றது ‐ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி போலியான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் ஒருமித்த கருத்து நிலவுவதாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு தமது கட்சி பூரண ஆதரவளித்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் மக்களிடம் பிரச்சாரம் செய்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹாரீஸ் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மீள இணைப்பு தொடர்பில் ஒருவரை ஒருவர் அறிவுறுத்தாமல் தகவல்களை வெளியிடுவதில்லை என்ற இணக்கப்பாட்டின் அடிபப்டையில் இரண்டு கட்சிகளும் கடந்த மூன்றாண்டு காலமாக நெருக்கமாக செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயத்தின் போது வடக்கு கிழக்கு மீள இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸிற்கு எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கிழக்கின் தமிழ் பிரதேசங்கள் வடக்குடன் இணைக்கப்படுவதில் எவ்வித முரண்பாடும் கிடையாது எனவும், கிழக்கு முஸ்லிம் பிரதேசங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் விரைவில் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக