ஞாயிறு, 3 ஜனவரி, 2010

மெனிக்பாம் முகாமைச் சேர்ந்த வலதுகுறைந்த மற்றும் பராமரிப்பு தேவைப்படும் 500சிறுவர்களை பராமரிக்க நடவடிக்கை..!!

வவுனியா மெனிக்பாம் முகாமைச் சேர்ந்த வலது குறைந்த மற்றும் பராமரிப்பு தேவைப்படுகின்ற 500 சிறுவர்களை சிறுவர் இல்லம் ஒன்றில் வைத்து பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் அனுமதியோடு, சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் ஊடாக கோட்ஸ் ஓன் சில்ரன் எனப்படும், கடவுளின் சொந்தக் குழந்தைகள் என்ற தொண்டு நிறுவனத்திடம் இதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. இந்த 500 சிறுவர்களில் முதல்தொகுதியாக 170 சிறுவர்கள் பொறுப்பேற்கப்பட்டு, யாழ்ப்பாணம் வடமராட்சி உபய கதிர்காமம் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் கிராமத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக கடவுளின் சொந்தக் குழந்தைகள் என்ற அமைப்பின் தலைவராகிய டாக்டர் பாலசுந்தரம் அனந்த்குமார் தெரிவித்துள்ளார். எஞ்சிய சிறுவர்கள் படிப்படியாக மனிக்பாம் முகாமிலிருந்து அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் டாக்டர் அனந்த்குமார் தெரிவித்துள்ளார். வலது குறைந்தவர்கள், மிகவறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பெற்றோரை இழந்தவர்கள் என பலவித காரணங்களினால் உரிய பராமரிப்பின்றி உள்ள சிறுவர், சிறுமியரையே தாங்கள் இவ்வாறு பொறுப்பேற்று பராமரிப்பதற்காக அழைத்துச் செல்வதாக கடவுளின் குழந்தைகள் என்ற அமைப்பின் தலைவராகிய டாக்டர் அனந்த்குமார் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக