யாழ் குடாநாட்டில் கடந்த காலங்களில் கடத்தப்பட்டவர்கள், காணாமற்போனவர்களை விடுதலை செய்வதாகப் பணம்பறிக்கும் நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஆரம்பித்துள்ளன. கிராம அலுவலர்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்புக்களை எடுத்து உரிய கிராம அலுவலர் பிரிவுகளில் கடந்த காலங்களில் வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள், காணாமற் போனவர்களின் விவரங்களைத் தரும்படியும் புலனாய்வுப் பிரிவிலிருந்து கதைப்பதாகவும் கூறி காணாமற் போனவர்கள், கடத்தப்பட்டவர்களின் விவரங்கள் பெறுவது போன்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் விவரங்களும் அவர்களின் தொலைபேசி இலக்கங்களும் பெறப்படுகின்றன. பின்னர் உரிய குடும்பங்களுக்குத் தொலைபேசி அழைப்புக்களை எடுத்து உரியவர் சிறுகுற்றம் செய்துள்ளார். அவர்களை விடுவிக்க குறிப்பிட்ட தொகை கட்டும்படி கோருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தமது உறவுகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக நம்பி பணம் பறிப்போர் குறிப்பிட்டுக் கூறிய வங்கியில் பணத்தை வைப்புச் செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்தவகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு சிலர் பணத்தை வங்கியில் கட்டியுள்ளதாகவும் பின்னர் பல இடங்களுக்கும் அலைக்களிக்கப்ட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இராணுவ மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும் இது குறித்து முறையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இது சம்மந்தமாக பொலிஸாரும் படைத்தரப்பினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக