வியாழன், 24 டிசம்பர், 2009

புளொட் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட மல்லாவிக்கு விஜயம் !!

புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தாhர்த்தன் உள்ளிட்ட புளொட் பிரதிநிதிகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவிப் பிரதேசத்தில் பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களை சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளனர். இவ்விஜயத்தில் புளொட் தலைவர் திரு.சித்தார்த்தனுடன், புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன், புளொட்டின் முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகளும் சென்றிருந்தனர். இதன்போது புளொட் பிரதிநிதிகள், மல்லாவியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள், வர்த்தகர்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகளை சந்தித்து நீண்டநேரம் கலந்துரையாடியதுடன், அவர்களுடைய குறைகளையும் கேட்டறிந்தனர். அவர்களுடைய குறைகளும், ஏனைய பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுடைய குறைகளைப் போலவே போக்குவரத்து, வீட்டு வசதி, சுகாதாரம் போன்ற குறைபாடுகளாக இருக்கக் காணப்பட்டன. அத்துடன் தங்களுடைய விவசாய உபகரணங்கள், உழவு இயந்திரங்கள், உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் உடமைகள் யாவும் முல்லைத்தீவு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகவும், அவற்றை மீளவும் தங்களுக்குப் பெற்றுத் தருமாறும் அம்மக்கள் கேட்டுக் கொண்டனர். அத்துடன் தமது விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும், வர்த்தக நடவடிக்கைகளை மீளமைக்கவும், வியாபார ஸ்தாபனங்களை மீளக் கட்டுவதற்கும் உதவிகளைப் பெற்றுத் தருமாறும் கேட்டுக் கொண்டனர். இதன்போது கருத்துரைத்த புளொட் தலைவர் சித்தார்த்தன், இங்கிருக்கின்ற சிரமங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறி, மிக விரைவில் இவற்றுக்கான தீர்வினைப் பெற்றுத்தர முயற்சிப்பதாக உறுதியளித்துள்ளார். இதேவேளை மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட மல்லாவி பகுதியில் சிறுசிறு வர்த்தக நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான ஆரம்பத்தினைக் காணக்கூடியதாக இருந்ததாக புளொட் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக