சனி, 19 செப்டம்பர், 2009

நாட்டுக்கு எதிராக சதியில் ஈடுபடும் தலைவர்களை அடையாளம் கண்டு மக்கள் பாடம் புகட்டுவர்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
எதிர்கால சந்ததியினருக்கு சுபிட்சமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கின்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் வலுவூட்டுவது தாய்நாட்டின் மீது பற்றுள்ள அனைவரினதும் கடமையாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தான் பிறந்து வளர்ந்து மரணிக்கின்ற தாய்நாட்டிற்கு எதிராக காட்டிக் கொடுப்புகளையும், சூழ்ச்சிகளையும் செய்வதையும் விடுத்து உலகின் பெருமையுடன் எழுந்து நிற்கக்கூடிய இலக்கை நோக்கி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் எமது பயணத்தில் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி அனைத்து எதிர்க் கட்சியினருக்கும் அழைப்பு விடுத்தார்.
காலி மாவட்ட மகா சங்கத்தினர், மற்றும் இளைஞர் அமைப்புகளையும் அலரி மாளிகையில் சந்தித்து பேசிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நேற்று முன்தினம் 17ஆம் திகதி இச்சந்திப்பு நடைபெற்றது.
எமது நாட்டைப் பற்றி தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி வெளிநாட்டினருடன் இணைந்து சூழ்ச்சிகளை செய்ய முற்படும் சகல தலைவர்களையும் அடையாளம் கண்டு தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.
பயங்கரவாதிகளை காப்பாற்றுவதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்துகொண்டு செயற்பட்ட சில தலைவர்கள் இன்று நாட்டில் சுதந்திரம் இல்லை எனக் கூறிக்கொண்டு ஆங்கில பத்திரிகைகளுக்கு பணம் செலுத்தி விளம்பரங்கள் செய்வது நாட்டின் மீதுள்ள பற்றுடன்தானா? எனவும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
தென்பகுதியில் மட்டுமல்ல வட பகுதியிலுமுள்ள சிறுவர் சிறுமியர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்குடனேயே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறேன். 30 வருடங்களின் பின்னர் வடபகுதி சிறுவர், சிறுமியர் ஆயுதங்களைக் கைவிட்டு பாட புத்தகங்களை கையில் எடுத்துள்ளனர். முகாம்களில் தங்கியுள்ள பிள்ளைகளின் கல்விக்காகவும் தேவையான அனைத்து கல்வி வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம்.நாட்டுக்காக எந்த சவால்களையும் எந்தவிதமான சேறு பூசுதல்களுக்கும் முகம்கொடுக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன். ஊடக நிறுவனத்தின் உரிமையாளரான எதிர்க்கட்சித் தலைவரின் மூத்த சகோதரர் கூட எமக்கு ஊடக சுதந்திரம் இங்கு நன்கு பேணப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரி வித்திருக்கிறார். அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரட்ண, பியசேன கமகே, உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக