ஞாயிறு, 4 ஜனவரி, 2015

அமெரிக்காவுக்கு வடகொரியா மீண்டும் எச்சரிக்கை.!!

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்திருக்கும் புதிய பொருளாதார தடைகள் வடகொரிய தேசத்துக்கு எதிரான நடவடிக்கை என்று குற்றம் சுமத்தியிருக்கும் வடகொரிய அரசு, இதன் இறுதிப்பலன்கள், எந்த நோக்கத்துக்காக இந்த தடைகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்டனவோ, அதற்கு நேர் எதிரானவையாக அமையும் என்று எச்சரித்திருக்கிறது.
வடகொரியாவுக்கு எதிரான இந்தத் தடைகள், வடகொரியாவின் ராணுவ நிலைப்பாட்டை உறுதி செய்யவே வழிசெய்திருக்கிறது என்று வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

வடகொரிய தலைவரை கொலை செய்வதாக சோனி திரைப்பட நிறுவனம் தயாரித்திருந்த நகைச்சுவை திரைப்படத்தைத் எதிர்த்து, சோனி திரைப்பட நிறுவனம் மீது வடகொரியா இணையவழித் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது. அதற்கான தனது பதிலடியாக கடந்த வெள்ளியன்று வடகொரியா மீது அமெரிக்க அரசு புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.
ஆனால் சோனி நிறுவனம் மீது நிகழ்த்தப்பட்ட இணைய வழி தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பு இல்லை என்று வடகொரிய அரசு மறுத்திருந்தது.
அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள், வடகொரியாவின் (அணு) ஆயுத தொழில்நுட்பத் திட்டங்கள் மற்றும் ராணுவ புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களை குறிவைத்து விதிக்கப்பட்டிருக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக