ஞாயிறு, 21 டிசம்பர், 2014

ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என அடுத்த வாரம் த.தே.கூ. அறிவிக்கும்..!! ஊடக சந்திப்பில் மாவை தெரிவிப்பு..(படங்கள் இணைப்பு)

அடுத்த வாரத்தில் யாருக்கு ஆதரவளிப்பது என அறிக்கை வெளிவரும் என தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி பிராந்திய மக்கள் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அபிப்பிராயம் கேட்கும் கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்கப்போகின்றோம் என விரைவாக அறிவிக்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர்.

அத்துடன் தாம் விரைவாக தேர்தலுக்காக வேலை செய்ய வேண்டும் தாம் எடுத்த முடிவை நிறைவேற்ற வேண்டும் நீங்கள் அதற்கான அறிவித்தலை தரவேண்டும் என எங்கள் அறிவித்தலை எதிர்பார்க்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் ஒருமித்த கருத்து வந்திருக்கின்றது. அதற்கு நாம் உடனடியாக அளித்த பதில் இந்த தேர்தலில் அனைவரையும் வாக்களிக்க செய்கின்ற வேலையை உடன் ஆரம்பிக்க வேண்டும் என சொல்லியிருக்கின்றோம்.

தேர்தலை பகிஸ்கரிப்பதோ அல்லது வாக்களிக்க தவறுவதோ அது எங்களுடைய இலக்குகளை நோக்கிய பயணத்தில் பயனுள்ள செய்கையாக இருக்காது.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது வாக்குப் பலத்தை நிரூபிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு அங்கத்தவரும் வேலை செய்யவேண்டும் என கேட்டுள்ளோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை அறிக்கை ஒன்றை தயாரித்துக் கொண்டிருக்கின்றோம். அத்துடன் எமது தலைவர் இன்னும் சில தினங்களில் உடல் நலம் பரிசோதிக்கப்பட்டதன் பின்னர் வர இருக்கின்றார் அதன் பின்னர் அறிக்கை மீது எமது கருத்துக்களை செலுத்தி அறிக்கையை வெளியிடுவோம்.

அடுத்த வாரத்தில் அக்கருத்து வர இருக்கின்ற போது அது வாக்காளர்களை வாக்களிக்க செய்வதும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என கூறுவதுமாக இருக்கும் என்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக