இந்திய பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரலில், எதிர்வரும் ஜனவரி மாதம் வரை இலங்கையை உள்ளடக்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நாட்டுக்கு வரவழைக்கும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு, இந்திய
வெளிவிவகார அமைச்சு இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்திப்பதற்கு முன்னர், இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் உறுதியளித்திருந்தார்.
எனினும், இந்திய பிரதமர் தான் வழங்கிய உறுதிமொழியை மீறி, முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
இலங்கை மக்களுக்கு பெரும் அழுத்தங்களை கொடுக்கக் கூடிய நாடுகளின் தலைவர்களை அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இலங்கைக்கு வரவழைக்க அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டது.
இதனடிப்படையில், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே நேற்று இலங்கை வந்ததுடன், எதிர்வரும் 15 ஆம் திகதி சீன ஜனாதிபதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
நியூயோர்க்கில் மோடியை சந்திக்கும் மகிந்த
ஐக்கிய நாடுகள் சபையின் 69 வது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளது.
ஐ.நாவின் 69வது பொதுச் சபைக் கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 26 ஆம் திகதி பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார்.
இதனையடுத்து 27 ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி பொதுச் சபையில் உரையாற்றுகிறார்.
இதனிடையே இவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக