புதன், 18 ஜூன், 2014

வடமாகாண சபையின் அதிகாரங்கள், அபிவிருத்திகளை தடுப்போர் தமிழ் இனத் துரோகிகள் முதலமைச்சர்...!!!!!

வடக்கு மாகாணத்திற்கு கிடைக்க வேண்டிய அதிகாரங்களையும், அபிவிருத்தி உதவிகளையும் யார் தடுக்கின்றனரோ அவர்கள் துரோகிகள். என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்
முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேசத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் அடங்கிய குழுவினர், துணுக்காய் பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.

இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது-

நான் துரோகி என்று சிலரைக் குறிப்பிட்டதாகத் தகவல்கள் வந்தன. இதுவரை நான் துரோகி என யாரையும் குறிப்பிடவில்லை. ஆனால் இன்று இந்த இடத்தில் அதைக் குறிப்பிடுகின்றேன். அதற்கான காரணங்கள் நிறையவே உண்டு.


குறிப்பாக வடக்கு மாகாணத்தை பல்வேறு துறைகளிலும் அபிவிருத்தி செய்யவேண்டியுள்ளது. இந்த அபிவிருத்திகளுக்கு எத்தனையோ பேர் உதவத் தயாராக இருக்கின்றனர். எம்முடன் தொடர்புகொள்கின்றனர். ஆனால் அத்தகைய உதவிகள் வந்து சேர்வதற்குப் பலர் தடையாக இருக்கின்றனர்.

குறிப்பாக வடக்குக்கு கிடைக்கும் உதவிகளைத் தமக்கும் பங்குபோட அவர்கள் எண்ணுகின்றனர். இதனால் தம்மூடாகவே அந்த உதவிகள் வந்து சேரவேண்டும் என்று கருதுகின்றனர். இதனால் எமக்கு நேரடியாகக் கிடைக்கும் உதவிகளைத் தடுத்து நிறுத்துகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களே துரோகிகள். - என்றார்.

முன்னதாக முதலமைச்சர், வடக்கு மாகாண கல்வி அமைச்சர், விவசாய அமைச்சர் உள்ளிட்டோர், துணுக்காயில் வீதி புனரமைப்பு குறைபாடுகள் குறித்து நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.

சந்திப்பைத் தொடர்ந்து மீண்டும் அப்பகுதிக் கிராமங்களைச் சென்று பார்வையிட்டு அபிவிருத்திக் குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக