வியாழன், 15 மே, 2014

தொண்டமானாறு நன்னீர் திட்டத்தால் மீனவக்குடும்பங்கள் பாதிப்பு; மாற்று வழியை ஏற்படுத்தக் கோரிக்கை!!!

நன்னீர் திட்டம் காரணமாக தொண்டமானாறு கடல் நீரேரியில் தொழில் செய்து வரும் ஆயிரக்கணக்கான சிறு தொழில் மீனவர்கள் வாழ்வாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என வடமாகாணக் கடற்றொழிலாளர் இணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த இணையம் மேலும் தெரிவித்துள்ளதாவது, மழையின்மை காரணமாக தொண்டமானாறு முதல் சுண்டிக்குளம் வரையான கடல்நீரேரி வற்றி வரண்டு போனது. இதன் காரணமாகவே அங்கு மீன்கள் இறந்து போயின. இந்தக் கடல்நீரேரி புனரமைக்கப்பட்டு, கடல்நீர் உட்புகாதவாறு
அபிவிருத்திப்பணிகள் நடைபெறுகின்றன. குடிதண்ணீர் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்தக் கடல் நீரேரியை நன்னீர் ஏரியாக மாற்றத் திட்டமிடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும் இந்த திட்டம் காரணமாக நீரேரியை நம்பி வாழ்வாதாரத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான மீனவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில், சிறுதொழில் செய்து வாழ்ந்து வரும் இந்தக் குடும்பங்களுக்கு மாற்றுத் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுப்பது சம்பந்தப்பட்டவர்களது பொறுப்பாகும். எனவே, இது குறித்து உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக