திங்கள், 15 நவம்பர், 2010

முல்லைத்தீவில் 50கோடிரூபா செலவில் உள்ளுராட்சி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான அபிவிருத்திப் பணிகள்..!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐம்பது கோடிரூபா செலவில் உள்ளுராட்சி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். யுத்தத்தின்போது கடுமையாக பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் வெகுவிரைவில் முழுமையான சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் பொருட்டும், மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளுர் வீதிகளை புனரமைக்கும் திட்டத்திற்கு 393 மில்லியன் ரூபாவும், பிரதேச சபைகளை நிர்மாணிப்பதற்கான ஒன்பது கட்டுமான பணிகளுக்கு 71 மில்லியன் ரூபாவும், ஏனைய நிர்மாண பணிகளுக்கு 36 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்துள் ளதாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.உதயராஜா தெரிவித்துள்ளார். வடக்கின் வசந்தம், வட மாகாணத்துக்கான அவசர புனரமைப்பு திட்டம் ஆகியவற்றின் ஊடாக வட மாகாண சபை இந்த அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின்கீழ் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 115 உள்ளூர் வீதிகள் முழுமையாக புனரமைக்கப்பட வுள்ளதுடன் புதுக்குடியிருப்பு, துணுக்காய், கரைத்துறைப்பற்றும் மற்றும் பாண்டியன் குளம் ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான அலுவலகங்களும், செம்மாலை கொக்கிளாய் பிரதேசத்திற்கான உப பிரதேச சபை அலுவலகங்களும் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன. துணுக்காய் பிரதேச சபைக்கு 2 கோடி 80 இலட்சம் ரூபாவும், கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு ஒரு கோடி 80 இலட்சம் ரூபாவும், மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு ஒரு கோடி 20 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 11 மில்லியன் ரூபா செலவில் துணுக்காய் பிரதேச சபை அலுவலகமும், 16 மில்லியன் ரூபா செலவில் துணுக்காய் பஸ் தரிப்பு நிலையம் மற்றும் கடைத்தொகுதியும் நிர்மாணிக்கப்படவுள்ளன. மாந்தை கிழக்கில் 5.5 மில்லியன் ரூபா செலவில் பாண்டியன் குளம் பிரதேசசபை அலுவலகமும், 6.5 மில்லியன் ரூபா செலவில் பொன்னகர் கிராமிய சந்தையும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. கரைத்துறைப்பற்று (மரிடைன்பற்று)பகுதியில் 14 மில்லியன் ரூபா செலவில் கரைத்துறைப்பற்று பிரதேச சபை அலுவலகமும், 2 மில்லியன் ரூபா செலவில் செம்மாலை பிரதேசசபை உப அலுவலகமும் 2 மில்லியன் ரூபா செலவில் கொக்கிளாய் பிரதேச சபை உப அலுவலகமும் நிர்மாணிக்கப்படவுள்ளன. புதுக்குடியிருப்பில் ஆறு மில்லியன் ரூபாசெலவில் ஒட்டுச் சுட்டானில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உப அலுவலகமும், முத்தையன் கட்டுசந்தையும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்கள் பெரிதும் நன்மையடையவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் கே.உதயராஜா மேலும் தெரிவித்துள்ளார். இந்த மாவட்டத்தின் உள்ளூராட்சி மேம்பாட்டுத்திட்டங்களை துரித கதியில் முன்னெடுக்கத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக