கால்நடை, சமூக அபிவிருத்தி, இளைஞர் வலுவூட்டல், கிராமியத்துறை அமைச்சராக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் நாளை புதன்கிழமை பதவியேற்பார் என்று இ.தொ.கா. வட்டாரங்கள் நேற்று தெரிவித்துள்ளன. புதிய அமைச்சரவை பதவியேற்றபோது கால்நடை அபிவிருத்தி அமைச்சு தொண்டமானுக்கு வழங்கப்பட்டதாகவும் ஆயினும் மலையக மக்களுக்குப் பயனுள்ள அமைச்சு பொறுப்பு வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உறுதியாகவிருந்ததால் அவர் அதனை அச்சமயம் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. நாளை ஆறுமுகம் தொண்டமானுடன் கலாநிதி சரத் அமுனுகம, கெஹலிய ரம்புக்வெல, எஸ்.பி.திஸாநாயக்கா ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்கும் சாத்தியமிருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கலாநிதி சரத் அமுனுகம விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சராகவும் கெஹலிய ரம்புக்வெல ஊடகத்துறை அமைச்சராகவும் எஸ்.பி.திஸாநாயக்கா உயர்கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்படும் சாத்தியம் இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேசமயம், கண்டி மாவட்ட ஆளுங்கட்சி எம்.பி.யான மகிந்தானந்த அளுத்கமகே பிரதியமைச்சராக நியமிக்கப்படலாம் என்று அறிய வருகிறது. கண்டி மாவட்டத்திலிருந்து எம்.பி.க்களாக ஆளுங்கட்சி சார்பில் தெரிவுசெய்யப்பட்டோர் புதிய அமைச்சரவை பதவியேற்றபின்போது உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. நாவலப்பிட்டி தேர்தல் வன்முறைகளையடுத்து அது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்பே அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சு பொறுப்பை வழங்குவதென அரச உயர்மட்டம் தீர்மானித்திருந்ததால் அச்சமயம் நியமனம் வழங்கப்படவில்லை. ஆயினும், நாவலப்பிட்டி தேர்தல் வன்முறைகள் தொடர்பான அறிக்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கண்டி மாவட்ட ஆளுங்கட்சி எம்.பி.க்களில் மூவர் அமைச்சர்களாகவும் ஒருவர் பிரதியமைச்சராகவும் பதவியேற்கும் சாத்தியம் உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக