
"யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும், மக்களிடையே நம்பிக்கை கட்டியெழுப்பப்படவில்லை என்பதுடன், சரணடைந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் தமிழ் இளைஞர்களுக்கு உரிய நீதி இதுவரை வழங்கப்படவில்லை. அவர்கள் மீதான விசாரணையை துரிதப்படுத்தி விடுதலை செய்யவேண்டும். அல்லது வழக்கு தாக்கல் செய்யவேண்டும்" என ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவரும் எம்.பியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ள நாட்டில் அவசரகாலச் சட்டம் தேவையில்லை, சிறைப்படுத்துவதன் மூலமாக உரிமைகளை பெற்றுக் கொடுக்க முடியாது. அதிகாரத்தை குரங்கின் கையில் சவரக் கத்தியை கொடுத்தது போல பயன்படுத்த முடியாது என்றும் அவர் சொன்னார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கன்னியுரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது:"எனக்கு 40 லட்சம் மக்கள் வாக்களித்து அரசியலுக்கு அழைத்திருக்கின்றனர். பொதுத்தேர்தலில் 4 1/2 லட்சம் பேர் ஜனநாயக தேசிய கூட்டணிக்கு வாக்களித்ததுடன் கொழும்பில் எனக்கு 98 ஆயிரம் பேர் விருப்பு வாக்களித்தனர். அதேவேளை, நாட்டின் நிர்வாகத்திற்கு எதிராக 30 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். வாக்களித்தவர்களுக்கும், என் மீது சேறு பூசி பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக