சனி, 24 ஏப்ரல், 2010

அடுத்த சில மாதங்களில் அரசியலமைப்பு மாற்றப்படும் : மைத்திரிபால சிறிசேன

நாட்டின் அரசியலமைப்பை மாற்றுவதற்கு அடுத்த சில மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில், ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை உள்ளடக்கியும் விகிதாசாரத் தேர்தல் முறையை மாற்றி அரச சேவையை செயல்திறன் மிக்கதாக்கும் வகையில் சட்டங்களைத் திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவர் மேலிம் தெரிவிக்கையில், சுயாதீன ஆணைக்குழுக்களை செயற்படுத்தவும் ஆணையாளர்கள் வினைத்திறனுடன் பணியாற்றுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்வதுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையிலும் மாற்றம் செய்யப்படும். கிராம மக்களுக்குப் பணியாற்றும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தொகுதியினை ஒதுக்குவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இப்போது முழுப் பிரதேசத்திற்குமான நாடாளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர். அந்த நிலையைத் தோற்றுவித்த விருப்பு வாக்கு முறைமை நீக்கப்பட்டுவிடும்" என்றார். பொதுத் தேர்தல் நிறைவுற்றதற்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முதலாவது செய்தியாளர் மாநாட்டை நேற்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நடத்தியது. இதில் முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிப் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, பொருளாளர் டலஸ் அழகப்பெரும, உப தலைவர்கள் நிமல் சிறிபால டி சில்வா, டபிள்யூ . டி. ஜே. செனவிரட்ன ஆகியோர் கலந்துகொண்டு புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து விளக்கிக் கூறினர். “நாட்டின் அபிவிருத்திக்கு ஏற்ற வகையில் யாப்பு மறுசீரமைக்கப்படும். எந்த நிறுவனங்களினதும் தடையின்றி அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப் படுமென்றும், 10 ஆண்டு அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அடுத்து வரும் மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர்கள் கூறினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக