வெள்ளி, 23 ஏப்ரல், 2010

ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பை வழங்கி ஒன்றிணைந்த சக்தியை உலகுக்கு வெளிப்படுத்துவோம்-புதிய பிரதமர்..!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒத்துழைப்பை வழங்கி இலங்கையராக ஒன்றிணைந்து எமது சக்தியை உலகுக்கு வெளிப்படுத்துவோமென புதிய பிரதமர் டி.எம்.ஜயரட்ன நேற்றையதினம் பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரையில் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தைச் சரியாக வழிநடத்துவதற்குப் பாரிய பொறுப்பு எதிர்க்கட்சிக்கு உண்டு எனச் சுட்டிக்காட்டிய பிரதமர் ஜயரட்ன, சபாநாயகரைத் தெரிவுசெய்ய ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்று அடுத்த 06 வருட காலத்திற்கும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். ஏழாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று ஆரம்பமானபோது புதிய சபாநாயகரைத் தெரிவுசெய்த பின்னர் பிரதமர் ஜயரட்ன உரையாற்றினார். அவர் மேலும் தெரிவிக்கையில், முழு நாட்டுமக்களுக்கும் சேவையாற்றக்கூடிய ஒரு வாய்ப்பு இப்போது கிடைக்கின்றது. புதிய சபாநாயகர் (சமல் ராஜபக்ஷ) புரிந்துணர்வுடன் செயற்படக்கூடியவர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது தந்தையாரின் அரசியல் வழியைப் பின்பற்றி 30 வருடகால யுத்தத்தை ஒழித்துக்கட்டி நாட்டை அபிவிருத்தி செய்துவருகிறார். அவரது சகோதரர் சபைக்குத் தலைமைதாங்குவது சிறப்பானதாகும். இந்நாட்டில் ஐந்து இனத்தவர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரே இலங்கையர்கள் என்ற ரீதியில் செயற்படுவோம். எமது மக்கள் அனைவரும் எந்தப் பாகுபாடுமின்றி வாழ வழிசமைக்க நாட்டுமக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். மக்களின் ஆணையை நடைமுறைப்படுத்தும்போது நாம் எமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக