
முல்லைத்தீவு நகரிலுள்ள முள்ளியவளை மத்தி, கள்ளப்பாடு, வண்ணான்குளம், உன்னாப்பிளவு, கரச்சிக்குடியிருப்பு ஆகிய ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலேயே இவர்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மீள்குடியேற்றும் பணிகள் இன்று முதல் மீண்டும் துரிதப்படுத்தப்படுகின்றது.
முல்லைத்தீவு நகரிலுள்ள மேற்படி ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலும் நிலக்கண்ணி வெடிகள் முழுவதும் அகற்றப்பட்டு, அவை மீள்குடியேற்றத்துக்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்டதையடுத்தே அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்போரை எதிர்வரும் 20, 22 ஆம் திகதிகளில் முல்லைத்தீவின் மேற்படி ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலும் மீளக்குடியமர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதனால் அவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
வவுனியாவிலிருந்து இன்று முல்லைத்தீவுக்கு அழைத்துச் செல்லப்படும் மக்கள் வற்றாப்பளை பாடசாலையில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குரிய கொடுப்பனவு, உலர் உணவுகள் ஆகியவை வழங்கப்பட்ட பின்னர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
நிலக்கண்ணி வெடிகள் முழுமையாக அகற்றப்பட்டிருக்கும் மேற்படி ஐந்து கிராம சேவகர் பிரிவுகளிலும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் கமநெகும வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படவிருப்பதாகவும் சேதமடைந்த வீடுகளை கட்டுவத ற்கு பல தன்னார்வ தொண்டு நிறு வனங்கள் முன்வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
வவுனியா நிவாரணக் கிராமத்தில் மீளக்குடியமர்த்தப்படுவதற்காக இன்னமும் 80 ஆயிரத்து 669 பேர் இருப்பதாகவும் குறுகிய காலத்துக்குள் இவர்களனைவரையும் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக