வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

அரசியலில் நுழையும் நோக்குடன் ஜெனரல் சரத்பொன்சேகா பதவிகளை தவறாக பயன்படுத்தினார்-பாதுகாப்புச் செயலர்..!

அரசியலில் நுழையும் நோக்கத்துடன் அரசியல் கட்சிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள இராணுவத்தளபதி மற்றும் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஆகிய அதிகாரபூர்வ பதவிகளின் அந்தஸ்தை பயன்படுத்தியமை காரணமாகவே ஓய்வுபெற்ற ஜெனரல் சரத்பொன்சேகாவை கைதுசெய்து அவர்மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் ஐ.ரீ.என். தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அரசியலில் தலையிடாமை மற்றும் பங்கேற்காமை காரணமாக இலங்கை மற்றும் இந்திய இராணுவங்களுக்கு ஆசியாவில் பொறுப்புள்ள படையினர் என்ற நல்ல மதிப்பு உள்ளது. எனினும் பொன்சேகா அவரது சேவைக்காலத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு பெற்றுக்கொள்ளும் நோக்கில் இராணுவத்தளபதி மற்றும் கூட்டுப் படைகளின் பிரதானி ஆகிய பதவி அந்தஸ்தை சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளிடம் செல்வாக்கு பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளதுடன் ஒரு சில அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இராணுவ தளபதியின் அதிகாரபூர்வ வாசஸ்தலத்தையும் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறான அவரது தவறான நடத்தை மற்றும் இராணுவ ஒழுங்கினை மீறியமை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சேவையில் இருக்கும்போது எவரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற கருத்தை இளம் இராணுவவீரர்களிடமும் ஏனைய நிலைகளில் உள்ள இராணுவ அதிகாரிகளிடம் ஏற்படுத்திவிடக்கூடும் இதனால் தான் சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டார். சரத் பொன்சேகா அவரது அதிகாரபூர்வ இராணுவ பதவிகளின் அந்தஸ்தையும் இராணுவ வளங்களையும் அவரது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள பயன்படுத்தியமைக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன என்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக