சனி, 19 டிசம்பர், 2009

பாதுகாப்புச் செயலாளரை சர்வதேசத்திடமிருந்து காக்க வேண்டிய தேவை எனக்கில்லை -சரத் பொன்சேகா!!!

நேற்றைய தினம் கண்டியில் தனது முதலாவது தேர்தல் ஊர்வலத்தில் கலந்து கொள்ள முன்னர் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகா டெய்லி மிரர் பத்திரிகையிடம் பேசியபோது தமது துருப்புக்கள் சர்வதேச யுத்த நீதிமன்றில் நிறுத்தப்படுவதற்கு தாம் ஒருபோதும் அனுமதியளிக்கப் போவதில்லை எனக் கூறியுள்ளார். மேலும் எந்த சர்வதேச நீதிமன்றத்திற்கு தான் செல்ல நேரிட்டாலும் பரவாயில்லை துருப்புக்களுக்கு எதுவித ஆபத்தும் ஏற்பட்டு விடப் போவதில்லை எனக் கூறியுள்ளார். மேலும் போரை வெற்றி கொள்வதற்கு தாம் இராணுவத்தில் இருந்த போதும் தம்மால் நல்ல நண்பர்களை அடைய முடியவில்லை எனவும் கூறினார். இராணுவத்தில் தகுதியும் திறமையுமற்ற பல இராணுவ அதிகாரிகள் உயர் பதவிகளில் உள்ளனர். தற்போது இராணுவத்தளபதியாக உள்ள லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவும் இவ்வாறான ஓர் தகுதியற்ற நபரே எனவும் அவரிடம் தாம் ஒருபோதும் முக்கிய தாக்குதல்களை கொடுத்ததில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இராணுவத்தில் தேவையற்ற ஆதிக்கங்களை செய்த சில அதிகாரிகளுக்காக தாம் குரல்கொடுக்கப் போவதில்லை. போர் இடம்பெற்ற போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முப்படையிலிருந்த வீரர்களும் மனிதஉரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என தாம் உறுதியாக நம்புவதாக அவர் தெரிவித்துள்ளதோடு தமது படைவீரர்களின் ஒழுக்கம் போர் முடியும்வரை 1000 சதவீதமாக இருந்தது எனவும் சொல்லியுள்ளார். எனவே தனது கட்டுப்பாட்டின் கீழ் போரில் ஈடுபட்டு வெற்றியீட்டித் தந்த எந்தவொரு படை உறுப்பினரையும் சர்வதேச நீதிமன்றங்களின் முன்னாள் நிறுத்த மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் பாதுகாப்புச் செயலாளரின் நடவடிக்கைகளை பாதுகாக்கும் தேவை தமக்கில்லையாம் அவர் தனது வேலைகளைச் செய்யாமல் எனது வேலைகளில் தலையிட்டு பல தேவையற்ற செயல்களை செய்தார் அவ்வாறான நபரைக் காப்பாற்ற வேண்டியதன் அவசியம் ஒன்றும் எனக்கில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக