சனி, 12 டிசம்பர், 2009

சிவாஜிலிங்கம் எம்.பி ஒரு சாராரிடம் பணம் பெற்றுக்கொண்டு பேசுகிறார்-சிவசக்தி ஆனந்தன் எம்.பி

தமிழ்க்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழ்மக்களின் வாக்கு பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்காக ஒரு பகுதியினரிடம் பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக அக்கட்சியின் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றஞ்சாட்டியுள்ளதாக ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாவிடின், தான் சுயேட்சையாகக் களமிறங்கப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நேற்று மீண்டும் வலியுறுத்தியிருந்தார். இது தொடர்பாகப் பதில் கருத்து தெரிவித்தபோதே பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்படி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். எமது கட்சியின் சார்பில் தமிழ்வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என இறுதியாக நடைபெற்ற எமது கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானித்திருந்தோம். இந்நிலையில் சிவாஜிலிங்கம் இவ்வாறு கூறியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்மக்களின் வாக்குகள் தமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. அதனால் அதனை திசைதிருப்புவதற்காக ஒரு பகுதியினரிடமிருந்து சிவாஜிலிங்கம் பணம் வாங்கியுள்ளார். அதற்காகவே தன்னிச்சையாக ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப் போவதாக அவர் கூறிவருகிறார். எனினும் எமது கட்சியின் முடிவு அதுவல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக