புதன், 27 மே, 2015

50 பசுக்கள், 100 ஆடுகள் சீதனத்துடன் ஒபாமாவின் மகளை திருமணம் செய்துகொள்ள முன்வரும் கென்யா மாப்பிள்ளை.!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு மாலியா, சாஷா என்னும் இரு மகள்கள் உள்ளனர். இவர்களில், தற்போது 16 வயது பருவப்பெண்ணாக இருக்கும் மாலியாவை திருமணம் செய்துகொள்ள தயாராக உள்ளதாக கென்யாவை சேர்ந்த வக்கீல் இளைஞர் தெரிவித்துள்ளார்.

கென்யாவின் கெரிச்சோ கவுண்ட்டியில் குன்றுகள் சூழ்ந்த நகரமான லிட்டெய்ன் பகுதியை சேர்ந்த பிலிக்ஸ் கிப்ரோனோ மடாகெய், ஒபாமாவின் மகளை திருமணம் செய்துகொள்வதில் மிகவும் தீவிரமாக உள்ளார். ஒபாமா தனது 2008-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்னரே, அப்போது 10 வயது சிறுமியாக இருந்த மாலியா மீது ஒருவகை ஈர்ப்பு ஏற்பட்டு விட்டதாக இவர் கூறுகிறார்.


கென்யா நாட்டு மரபுகளின்படி, மணமகளுக்கு திருமண சீதனமாக 50 பசுமாடுகள், 70 செம்மறியாடுகள், 30 வெள்ளாடுகளை வழங்கப் போவதாக தெரிவித்துள்ள இவர், இதற்கு முன்னர் எந்தப் பெண்ணுடனும் நான் பழகியது கிடையாது. மாலியாவுக்கு நான் உண்மையானவனாக நடந்து கொள்வேன் என்று குறிப்பிடுகிறார்.

வரும் ஜுன் மாதம் கென்யாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவரும் ஒபாமாவை நேரில் சந்தித்து பெண் கேட்கப் போவதாக உறுதிபட தெரிவிக்கும் கிப்ரோனோ, ’எனது ஆசையை என் குடும்பத்தாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த ஆடு, மாடுகளை எல்லாம் எனது திருமணத்துக்காக தந்துவிடவும் அவர்கள் சம்மதித்துள்ளனர். எங்கள் திருமண விருந்தில் ‘சாம்பெய்ன்’ மதுவுக்கு பதிலாக ’முர்சிக்’ (காரமான பால்) மட்டுமே பரிமாறப்படும்’ என்கிறார்.

தற்போது 90 வயதாகும் ஒபாமாவின் பாட்டி, மேற்கு கென்யாவில் உள்ள கோகெலோ நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், அரசுமுறைப் பயணமாக வரும் ஜூலை மாதம் கென்யாவுக்கு வரும் ஒபாமாவுக்கு பூங்கொத்து அளித்து, உற்சாக வரவேற்பு கொடுத்தால் மட்டும் போதாது. அவருக்கு கென்யா நாட்டு குடியுரிமையும் வழங்கப்பட வேண்டும் என்றும் இவர் வலியுறுத்தியுள்ளார்.

திருமணத்துக்கு பின்னர் என் மனைவி வீட்டு வேலைகளை செய்துகொண்டும், ஆடு, மாடுகளை பராமரித்து, பால் கறந்து அவற்றை நல்லபடியாக கவனித்து கொண்டால் போதும் என்று கூறும் இவருக்கு அடுத்த மாதம் ஒபாமாவின் மெய்க்காப்பாளர்களிடம் ‘செம்ம மாத்து’ காத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக