ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

ஸ்ரீபவனின் காலத்தில் நீதித்துறை வலுவடைந்து முன்னேறும் சி.வி...!!!

இலங்கையின் புதிய தலைமை நீதியரசராக பதவியேற்றுள்ள கே. ஸ்ரீபவனின் காலத்தில் நாட்டின் நீதித்துறை வலுவடைந்து நல்ல நிலையை நோக்கிச் செல்லும் என்று ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
இலங்கையின் நீதித்துறை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு பின்னடைவுகளை சந்தித்திருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுவந்தது.

இந்த சூழ்நிலையிலேயே, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் நாட்டின் 44வது தலைமை நீதியரசராக கே.ஸ்ரீபவனை நியமித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த நீதியரசர் என்ற ரீதியில் கே. ஸ்ரீபவனுக்கு தலைமை நீதியரசர் பதவி கிடைத்திருப்பதை வரவேற்பதாகவும் சி.வி. விக்னேஸ்வரன்  கூறினார்.


இலங்கை சட்டக்கல்லூரியில் கே. ஸ்ரீபவன் தனது மாணவராக கல்வி கற்றவர் என்பதையிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவதாகவும் விக்னேஸ்வரன் கூறுகின்றார்.

எனினும், நீண்டகால பிரச்சனைகளை ஒரேநாளில் தனியொரு நபரினால் தீர்த்துவிட முடியாது என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக