தேர்தலில் தோல்வியடைந்தாலும் ஆட்சி அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றிக் கொள்ள எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா ஏற்கனவே திட்டமிட்டிருந்தார். இதற்காக இராணுவத்தில் இருந்து தப்பியோடிய படையினரையும் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்துள்ளார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்பியுமான விமல் வீரவன்ச தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு ஜெனரல் சரத்பொன்சேகாவை நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு இடமளியாது சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை வழங்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றியீட்டிய பிரதேசங்களை இணைத்தால் தமிழீழ வரைப்படம் தோன்றும் இதிலிருந்து எதிர்கட்சிகளின் நோக்கத்தினை பொதுமக்கள் இனங்கண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று பத்தரமுல்லயில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே விமல் வீரவன்ச எம்பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளருக்கு ஜனநாயக ரீதியில் வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணம் இருக்கவில்லை. பொதுமக்களை குழப்பி இராணுவத்திலிருந்து தப்பியோடிய படையினரையும் வேறுசில ஆயுததாரிகளையும் பயன்படுத்தி ஜனாதிபதி மாளிகை மற்றும் செயலகம் போன்ற முக்கிய இடங்களை சுற்றிவளைத்து பலவந்தமாக ஆட்சியை கைப்பற்றிக் கொள்ளும் திட்டமே காணப்பட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக